திருச்சியில் சட்டவிரோத காப்பகம்: ஜெர்மனி பாதிரியார் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

மதுரை: ஜெர்மனியைச் சேர்ந்தவர் கிதியோன் ஜேக்கப். இவர் திருச்சியில் மோசே மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இந்தக் காப்பகத்தில் பெண் குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி கிதியோன் ஜேக்கப், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.

அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் காப்பகத்தில் 89 சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்” என்றார்.

அதேநேரத்தில், மனுதாரர் தரப்பில் வாதிடும்போது, “மனுதாரர் அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மனுதாரரின் நடத்தை மனிதாபிமான அடிப்படையிலானது என்றாலும், அது சட்டப்படியானதாக இருக்க வேண்டும். அதில் விதிமீறல், நிபந்தனை மீறல் இருந்தால், விசாரணையைச் சந்தித்தே ஆக வேண்டும். எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், மனுதாரர் அடிக்கடி ஜெர்மனி செல்ல வேண்டியது இருப்பதால், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரி உள்ளார். மனுதாரர் 15 நாட்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதியளித்து, அதற்கான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.