மதுரை: மதுரையில் கலைஞர் நூலகத்தை முதல்வர் ஜூலை 15ம் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி, பந்தல் அமைத்தல், பாதுகாப்பு, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை – நத்தம் ரோட்டில் ரூ.120.75 கோடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூலை 15-ல் நடக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்கும் விதமாக விழா ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.
நூலக கட்டிடம் அருகிலுள்ள மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழாவிற்கான மேடை, பந்தல் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே, மைதானத்திலுள்ள பார்வையாளர் கேலரி பகுதிக்கு முன்பு பகுதியில் மேடை அமைக்கப்படுகிறது. மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழா நடக்குமிடம், மைதானம், நூலக பகுதியில் முன்கூட்டியே வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நிறுத்தப்படுகின்றனர். கட்சியினரைவிட மாணவ, மாணவிகள் அதிகமாக பங்கேற்க திட்டமிடுபடுகிறது.
இதனிடையே, முதல்வர் வருகை மற்றும் விழா நடக்கும் பகுதியிலும் எவ்வாறு பாதுகாப்பு மேற்கொள்வது என பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.