நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்காமல், தற்காலத்திலேயே அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அந்த பிரச்சினைகள் நிவர்த்திக்கப்படும் பட்சத்தில் வருடம் ஒரு முறை ஜெனீவாவில் சாட்சிக் கூண்டில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை பற்றி சிவில் சமூகத்தை தெளிவூட்டும் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் நோக்கத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரிதெளிவுபடுத்தியதோடு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் பற்றியும் வெகுவாக ஆராயப்பட்டது.

பின்னர் ஆணைக்குழுவின் நோக்கத்தை அடைவதற்கு சிவில் சமூகத்தின் நிலைப்பாடுகளை கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க சகலரதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்வதற்கு அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பு மிக அவசியமானதென ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.