சென்னையில் ‘மீல் மங்கி’ எனும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திருமேனி (அர்ஜுன் தாஸ்). அந்தப் பணியில் தினசரியாக அவர் சந்திக்கும் அவமானங்களும், சாக்லேட் மற்றும் அது குறித்த விளம்பரங்களும் அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றன. இதன் விளைவாக யார் அவரை கோபப்படுத்தினாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற விபரீத எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது.

இதற்காகச் சிகிச்சைக்குச் செல்லும் அவருக்கு உளவியல் சிக்கல் இருப்பது தெரிய வருகிறது. மறுபக்கம் ஒரு பணக்கார வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணாக இருக்கிறார் சுப்பு (துஷாரா விஜயன்). இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒருவர் பிரச்னைக்கு மற்றவர்கள் ஆறுதலாக இருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு மரணம் குறுக்கிடுகிறது. அது இவர்கள் வாழ்க்கையை என்னவெல்லாம் செய்கிறது என்பதே ‘அநீதி’ திரைப்படத்தின் கதை.
நிஜ வாழ்க்கையில் மன அழுத்தத்தினால் அவதியுறுபவராகவும், அதே வேளையில் கற்பனை உலகினில் கோபப்பட்டு எதிர்வினையாற்றுபவராகவும் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ். இருந்தும் வாழ்வில் அனைத்தையும் இழந்தவனுக்கு மீண்டும் கிடைக்கும் காதல் உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம். நாயகனின் மனநல பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் காதல் காட்சிகளிலும், வீட்டு எஜமானர்களுக்குப் பயப்படும் அச்ச உணர்வினை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் துஷாரா விஜயன்.
பணக்காரத் திமிர் கொண்ட பாட்டியாக வரும் சாந்தா தனஞ்சயன் பார்வையாளர்களுக்குக் கோபத்தைத் தூண்டும் விதமாகப் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். திருநெல்வேலி வட்டார வழக்கில் வெள்ளந்தி மனிதராக வரும் காளி வெங்கட், உணர்வுபூர்வமான காட்சிகளில் நெகிழ வைக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என அவர் மெனக்கெட்டிருப்பது பாராட்டுக்குரியது. அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ரெனிஷ் கவனிக்கத்தக்கப் புதுவரவு. வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரின் வில்லத்தனத்தில் மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது. மற்ற கதாபாத்திரங்களான ஷாரா, பரணி, அப்துல் லீ ஆகியோர் தங்களுக்கான பணியைச் செய்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் முதல் பாதியில் வரும் இரண்டு பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல காட்சியின் வீரியத்தை தன் பின்னணி இசையாலும் உயர்த்தியிருக்கிறார். குறிப்பாக அர்ஜுன் தாஸ் உடைந்து அழும் காட்சியின் மதிப்பை இசை கூட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் ரவிக்குமார் மனப்பிறழ்வுக்கான சிக்கலான மனநிலையை ‘Requiem for a Dream’ திரைப்படத்தின் ரிதமேட்டிக் மான்டேஜ் பாணியில் கட் செய்திருப்பது அருமை. ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சாக்கே பிளாஷ்பேக் காட்சிகளில் வெயில் பூமியின் அழகைக் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. படத்தில் வரும் பெரும்பாலான இரவு ஷாட்களும் கவனிக்க வைக்கின்றன. “கைகூப்பி மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுஷனே இல்ல” என்ற வசனத்தில் வசனகர்த்தா எஸ்.கே ஜீவா கவனம் பெறுகிறார்.

கதை ஆரம்பித்த சில காட்சிகளிலே நாயகனுக்கான பிரச்னை, அவனது தொழில், நாயகியின் அறிமுகம், அவளுக்கான பிரச்னை எனக் காட்சிகளின் கோர்வையாக மட்டுமே நகர்கிறது கதையோட்டம். இதில் முகத்தைப் பார்த்துக் கொள்ளாமல் “பெரிய கேட்”க்கு நடுவே ஆக்கிரமிப்பு செய்கிற காதல் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அந்த காட்சிகளின் நீளத்தைச் சற்றே கத்தரித்திருக்கலாம். இப்படி மெல்ல நகரும் திரைக்கதை முதல் பாதியின் முடிவில்தான் சற்று வேகமெடுக்கிறது.
அடுத்தது என்னவென்று இரண்டாம் பாதி பரபரப்பான காட்சிகளால் நகரும் என்று எதிர்பார்ப்பில் இருக்க, அதிலிருந்து விலகி நாடகத்தன்மைக்குள் நுழைகிறது திரைக்கதை. திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் அறந்தாங்கி நிஷாவை வைத்து நகைச்சுவை செய்யவைத்திருப்பது காட்சிகளின் வீரியத்தைக் குறைக்கிறது. இருப்பினும் பிளாஷ் பேக் காட்சிகளில் நாயகனின் மீது பரிதாபம் உண்டாகும்போது ‘வெயில்’ வசந்தபாலன் டச் வெளிப்படுகிறது.
ஏற்கெனவே சிக்கலுக்கு மேல் சிக்கலாக நகரும் திரைக்கதையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களின் போராட்டத்தையும், அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்களையும் காட்டியது அக்கறையான அலசல் என்றாலும் வலிந்து திணித்த உணர்வினையே தருகிறது. தனியார்மயத்தின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் துரித பொருளாதாரத்தின் (Gig Economy) கீழ் வரும் இத்தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு பணிரீதியாகவும் உரிமை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைத் திரைக்கதையில் சரியாகப் பதிவு செய்யவில்லை.
மேலும், கதாநாயகனின் மனரீதியான பிரச்னைகளுக்கும் அதன் விளைவாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் இந்த பணிச்சுமை காரணமா அல்லது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பெருந்துயரம் காரணமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. பணிச்சூழலை எதிரியாகக் கருதி, கதாநாயகன் போன்ற பல தொழிலாளர்களின் பக்கம் உரிமை ரீதியாக நிற்பதா அல்லது கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவரின் மேல் இரக்கத்தைச் செலுத்துவதா எனக் குழப்பம் ஏற்படுகிறது.

இந்தக் குழப்பத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, கதாநாயகன் கோபத்தில் செய்யும் கொலைகளுக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறது திரைக்கதை. மொத்தத்தில் இது தனிநபர் பிரச்னையா அல்லது தொழிலாளர்களின் பிரச்னையா என்பதில் இறுதிக்காட்சி வரையுமே தெளிவு இல்லை. ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிட்டது என்ற கனமான உணர்வினைத் தந்த பின்னரும் 20 நிமிடங்களுக்கு மேல் ஓடும் பழிவாங்கும் காட்சிகள் யாரைப் பழிவாங்க? இருந்தும் அதில் சுவாரஸ்யம் குறையாமல் `ஆங்கிரி யங்மேன்’ உருவாகும் இடமாக அதை மாற்றியிருப்பது ஆறுதல்.
மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை ஆரம்பத்தில் கோர்வையாகக் கொண்டு சென்ற இயக்குநர், பின்னர் அதிலிருந்து சற்றே விலகி, க்ளைமாக்ஸில் குழப்ப ரேகைகளைப் படரவிட்டுப் படத்தை முடித்து வைத்திருக்கிறார்.

இரண்டாம் பாதியின் திரைக்கதையில் இன்னும் தெளிவு இருந்திருந்தால் இந்த `அநீதி’, இயக்குநர் வசந்தபாலனின் மற்றுமொரு அதி முக்கியமான படைப்பாக இருந்திருக்கும். இப்போது சாதாரண த்ரில்லராக மட்டும் திருப்திப்பட்டுக் கொள்கிறது.