'கொடுமையை கண்டு மவுனம் காப்பது கொடிய குற்றம்' – ஜனாதிபதிக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடிதம்

ராஞ்சி,

மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

“கொடுமையை கண்டு மவுனம் காப்பது ஒரு கொடிய குற்றமாகும். எனவே மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த வேதனையுடனும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறேன்.

மணிப்பூரும், இந்தியாவும் இந்த இருண்ட நெருக்கடியான நேரத்தை எதிர்கொண்டு வரும் சமயத்தில், மணிப்பூர் மக்களுக்கும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த இக்கட்டான காலங்களில் ஒளியை காட்டக்கூடிய நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் கடைசி ஆதாரமாக நாங்கள் உங்களை எதிர்நோக்குகிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன், மணிப்பூரில் இருந்து சமூக ஊடகங்களில் கசிந்த ஒரு காணொளியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட விவரிக்க முடியாத காட்டுமிராண்டித்தனம் நம் அனைவரையும் ஆழமாக உலுக்கியது.

ஜார்கண்ட் முதல்-மந்திரி மற்றும் இந்த தேசத்தின் அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையில், மணிப்பூரின் நிலைமை குறித்து நான் மிகுந்த மனவேதனையும் கவலையும் அடைகிறேன். அங்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு, சொத்துக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. பெண்கள் சொல்ல முடியாத சித்திரவதை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

நமது அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள மனித வாழ்வு மற்றும் கண்ணியத்தின் உள்ளார்ந்த கோட்பாடுகள் முற்றிலும் உடைந்துவிட்டதாக தெரிகிறது. ஒரு சமூகம் ஒருபோதும் மக்கள் உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் மிருகத்தனத்திற்கு ஆளாகும் நிலையை அடையக்கூடாது.

உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடாக இருந்தாலும், மே 3 முதல் மணிப்பூரில் அமைதி, ஒற்றுமை, நீதி மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகியவற்றின் சிதைவை இந்தியா கண்டுள்ளது. மாநில அரசு தனது சொந்த மக்களைப் பாதுகாப்பதிலும், வன்முறை மற்றும் அமைதியின்மையைத் தணிப்பதிலும் தவறிவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தினமும் இரவும் பகலும், பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் சமீபத்திய வீடியோவுடன் இதயத்தை உலுக்கும் காட்சிகளை நாம் காண்கிறோம். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது போல் தெரிகிறது. சில சுயநலவாதிகளின் மறைமுக ஆதரவுடன், இந்த இனக்கலவரம் தடையின்றி தொடர்கிறது என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி என்ற முறையில், நீதி மற்றும் இரக்கக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு எப்போதும் நம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகிறது. முன்னோக்கிச் செல்லும் வழியைக் கண்டறியவும், நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், மணிப்பூரின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நான் இன்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு தனது கடிதத்தில் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.