தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா? அண்ணாமலை பரபரப்பு தகவல்!

திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பாஜகவின் இந்த போராட்டத்தில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகையை அனைவருக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் வருவாயை நம்பிதான் தமிழக அரசு செயல்படுகிறது என்றும் சாடினார் அண்ணாமலை. மேலும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர் என விமர்சித்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவை திமுக தடுக்கவில்லை என்றும் அண்ணாமலை சாடினார். திமுக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்ற அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் செய்வதுதான் முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் என்றும் விளாசினார்.

தொடர்ந்து வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது இன்னும் உறுதி ஆகவில்லை என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.