No extension of deadline for exchange of Rs 2000 notes: Central Govt | ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை: மத்திய அரசு

புதுடில்லி: வங்கிகளில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும்; டிபாசிட் செய்யவும், செப்டம்பர் 30 வரை ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

கடந்த மே 19ம் தேதியன்று, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும்; செப்டம்பர் 30ம் தேதிக்குள், மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டிபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேவைப்படும்பட்சத்தில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சூசகமாக தெரிவித்திருந்தார்.

தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என துணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 30ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, 2.72 லட்சம் கோடி ரூபாய் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, கடந்த ஜூன் 30ம் தேதி வரையிலான காலத்தில், 76 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், திரும்பப் பெறப்பட்ட மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில், 87 சதவீதம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 13 சதவீதம், வேறு மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.