மானாமதுரை: தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் சிவகங்கையில் நிற்காது. மானாமதுரையில் கிராஸிங்குக்காக மட்டுமே நின்று செல்லும். இதனால் பயணிகள் ஏற முடியாத நிலை உள்ளது.
தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் சேவையை சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, தென்காசி வழியாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டையை அடையும். அதேபோல் மறுமார்க்கமாக திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
இந்த ரயில், கிராசிங்குக்காக மானாமதுரையில் நின்று செல்கிறது. ஆனால் முக்கிய ஜங்ஷனான மானாமதுரையை நிறுத்தமாக அறிவிக்காததால் பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாது. அதேபோல் சிவகங்கையில் இந்த ரயில் நின்று செல்வதில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் மட்டுமே நின்று செல்கிறது. சிவகங்கை, மானாமதுரை மக்கள் சென்னை, செங்கோட்டை, தென்காசிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக தாம்பரம்- செங்கோட்டை ரயிலை இரண்டு இடங்களிலும் நின்று செல்ல கார்த்தி சிதம்பரம் எம்.பி. குரல் கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.