சிங்கப்பூர், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம், 66, தன் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வரும் ஹலிமா யாகோபின் ஆறு ஆண்டு பதவி காலம் செப்., 13ல் முடிவுக்கு வருகிறது. இதை தொடர்ந்து, செப்., மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது.
இதில் போட்டியிடப் போவதாக, அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் கோ, முதலீட்டு மேலாளர் காக் சாங், முன்னாள் அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான தர்மன் சண்முகரத்னம் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
இதில், தர்மன் சண்முகரத்னம் தன் தேர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார். மனைவி ஜேன் யுமிகோ இடோகி உடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வரும் தர்மன் சண்முகரத்னம், பொருளாதார நிபுணராகவும், சிங்கப்பூர் அரசு துறையிலும் பணியாற்றி உள்ளார். குறிப்பாக, சிங்கப்பூர் நிதி ஆணையத்தில் பணியாற்றினார்.
அவர் அரசியலுக்கு வந்த பின், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகவும், 2011 – 19 வரை சிங்கப்பூர் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், சர்வதேச நிதியம், உலக பொருளாதார மன்றம், ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் பிரதான பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக அரசியலில் இருந்தவர், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement