அதிகாரத் திமிர்… என்எல்சியை முற்றுகையிட்டு நாளை போரட்டம் அன்புமணி அதிரடி!

என்எல்சி நிறுவனத்திற்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக விளை நிலங்களில் கனரக வாகனங்களை இயக்கி பயிர்கள் அழிக்கப்பட்டன. இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும் பேருந்துகள் மீது கற்களையும் வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்எல்சி நிர்வாகத்திற்காக விளை பயிர்களை அழித்து நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில்

தலைவர்

கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றே தனது கண்டனங்களை அறிக்கை மூலம் பதிவு செய்த அன்புமணி ராமதாஸ், நாளை என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக ஈடுபட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரம் கையில் இருக்கிறது, அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என் துணிச்சலில் இத்தகைய மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் என்எல்சி நிறுவனம், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தி வருவதாகவும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அன்புமணி, கடலூர் மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்து ஈட்டிய இலாபம் முழுவதையும் வட மாநிலங்களில் முதலீடு செய்து வரும் என்.எல்.சி நிறுவத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

மக்களுடன் துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்படுகிறது என்றும் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்து வருகிறது என்றும் சாடியுள்ளார். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் மக்களின் போராட்டம் குறித்து சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டிருப்பது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது என்றும கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இதனை பாமக ஒருபோதும் அனுமதிக்காது என கூறியுள்ள அன்புமணி, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தியும் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தியும் பாமக சார்பில் நாளை என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் அரசியல் நிலைப்பாடுகளை கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.