தற்போதைய திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு மேலதிகமாக, இலங்கையில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தமது நாடு நடவடிக்கை எடுத்து வருவதாக கொரியக் குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ தெரிவித்தார்.
கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ அவர்களுக்கும் பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.
நீர் சுத்திகரிப்பு, சுகாதாரம், கழிவுகளை அகற்றும் முறைமைகள் மற்றும் உலர் வலய விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு பிரச்சினை காரணமாக முடங்கிய பல உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, இந்த திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று புதிய கொரிய தூதுவர் குறிப்பிட்டார்.
விவசாய இயந்திரங்கள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்பிடி போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கொரியாவுக்கு தற்போது கிடைத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கலாசார, சமய உறவுகள், கல்விப் பரிமாற்றங்கள், மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என தூதுவர் தெரிவித்தார். தற்போது கொரியாவில் 25,000 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் 7,000 பேர் இவ்வருடத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பருவகால விவசாயத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த கோரிக்கையை தனது அரசாங்கம் பரிசீலிக்கும் என்று தூதுவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, கொரிய தூதரகத்தின் முதன்மை செயலாளர் சோங்கி ஜங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு.