திருச்சி: வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை பிறப்பித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அமைச்சர்களின் அலுவலகங்களில் நாம் வைக்கும் எந்தக் கோரிக்கையும் நிறைவேறவில்லையே என்ற மனப்புழுக்கத்தில் இருந்து வந்த கட்சிக்காரர்கள், ஸ்டாலின் போட்டுள்ள உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் பேசிய போது திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இதனை நினைவூட்டினார். அது தொடர்பான அவரது உரை வருமாறு;
”உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கின்றன என்று சொன்னால், அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அது எப்படி மாற முடியும்? சொல்கிறேன்.
முதலில் உங்கள் வாக்குச் சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவருடைய குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார், என்ன தொழில் செய்கிறார், எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது உள்ளிட்ட முழுவிவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் இன்று வழங்கப்பட்டிருக்கும், “திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்” என்ற புத்தகத்தை நீங்கள் படித்துப் பார்த்தாலே, அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் மிகத் தெளிவாக தெரிந்துவிடும்.
யாருக்கு என்ன தேவையோ அதைக் கண்டறிந்து பெற்றுக் கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவையையும் கண்டறிந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தாருங்கள்.
இதனைச் செய்து தர, உங்கள் பகுதியின் ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகச் செயலாளரையோ, மாவட்டக் கழகச் செயலாளரையோ – சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது அமைச்சர்களையோ அணுகுங்கள். நம்முடைய வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்களிடமும் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நான் பலமுறை சொன்னாலும், இப்போது திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தப் போகிறேன்.

நீங்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். தினமும் ஒரு மணி நேரத்தை வாக்குச்சாவடிப் பணிகளுக்கு என்று ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் சென்று வந்துவிடலாம்.
சில வீடுகளில் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். சில வீடுகளில் பட்டும்படாமல் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பே இல்லாமல்கூட இருக்கலாம். அதற்காக நாம் விட்டுவிடக் கூடாது. மீண்டும் மீண்டும் அடுத்த மாதம் புன்னகையோடு அவர்களை அணுகுங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.”