நடை பயணமும்.. சொகுசு பேருந்து பயணமும் – அண்ணாமலை பிளான் இது தான்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதுமான தனது நடைபயணத்தை நாளை தொடங்குகிறார். 234 தொகுதிகளிலும் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை பாஜக அரசின் சாதனைகளையும் திமுக மீதான குற்றச்சாட்டுக்களையும் மக்களிடம் விளக்கவுள்ளார்.

அண்ணாமலையின் இந்த நடை பயணம் நாளை ராமேஸ்வரத்தில் தொடங்க உள்ளது. இந்த நடை பயணத்தை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான அண்ணாமலை மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த நடை பயணத்தின் போது பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளதாக கூறினார். மேலும் 168 நாட்களில் 234 தொகுதிகளில் 1,700 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

மேலும் தன்னுடன் ஒரு சொகுசு பேருந்து வரும் என்றும் மக்கள் இல்லாத இடங்களில் அந்த பேருந்தில் பயணம் செய்வேன் என்றும், மக்கள் இருக்கும் பகுதிகளில் நடை பயணம் மேற்கொள்வேன் என்றும் கூறினார். அப்படி சென்றால்தான் 168 நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் மக்களை சந்திக்க முடியும் என்றும் கூறினார்.

இந்த நடைபயணத்தின் போது 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் அமித்ஷா பங்கேற்கும் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதிபடுத்தவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தமிழகம் நன்றாக இருக்க விரும்புபவர்கள் தங்களின் பயணத்தில் பங்கேற்கலாம் என்றார்.

கடலூரில் என்எல்சி நிறுவனத்திற்காக, கால்வாய் அமைக்க பயிரிடப்பட்ட விளைநிலங்களில் கனரக வாகனங்கள் இறக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை என்எல்சி விரிவாக்கம் தேவை தான், ஆனால் அதை முறையாக செய்ய வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.