உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும், பிரதமர் மோடி அது தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்து பல்வேறு வழிகளில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

அந்தப் போராட்டத்தின் மற்றொரு வடிவமாக I.N.D.I.A கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு கறுப்பு நிற உடையில் வருகை தந்து, மணிப்பூர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் எனக் தெரிவித்தனர். இது குறித்து கறுப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சதா, “மணிப்பூர் மக்கள் மீதான அட்டூழியங்களையும், அங்கு நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தையும் எதிர்த்து இன்று கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வந்திருக்கிறோம். இது I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்களின் முடிவு. துக்கமான இந்த நேரத்தில் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், “எங்கள் கறுப்பு உடைகள் பிரதமரின் ஆணவத்திற்கு எதிரானது. நாடு எரியும் போது, மணிப்பூர் பிளவுபடும்போது, அவர் தனது சொந்த நலனைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “எதிர்க்கட்சிகளின் நேற்றைய தினமும் கறுப்பு, இன்றைய தினமும் கறுப்பு, எதிர்காலமும் கறுப்புதான்.

அவர்களின் இதயங்களும் கறுப்பு என்பதால் அவர்கள் கறுப்பு உடை அணிந்திருக்கின்றனர்” என்று கூறினார். பியூஷ் கோயலின் கருத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.