8 மாதக் குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி… காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ்!

மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்தேவ் கோஷ் – சதி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதக் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், தீடீரென 8 மாதக் குழந்தை காணாமல்போனதாக தம்பதி அக்கம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேடியும் குழந்தைக் கிடைக்கவில்லை. அதனால், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்கள். ஆனால், சில தினங்களிலேயே அந்தத் தம்பதி மகிழ்ச்சியாகக் காணப்பட்டிருக்கிறார்கள். திடீரென அவர்களிடம் ஐபோன்-14 இருந்திருக்கிறது.

ஐபோன்

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்தில் தம்பதிமீது சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்கள். காவல்துறையினரும் உடனடியாக இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், “தம்பதி, ஏழ்மையான நிலையிலேயே வாழ்வை நடத்தியிருக்கிறார்கள். இருவரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அதனால் ஐபோன் வாங்கத் திட்டமிட்டபோது மனைவி சதி, 8 மாதக் குழந்தையை விற்றுவிடலாம் எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அவரின் கணவர் ஜெய்தேவும் சம்மதம் தெரிவித்ததால், குழந்தையை விற்றிருக்கிறார்கள். மேலும் விசாரணையில், 7 வயது சிறுமியையும் அவர்கள் விற்பதற்கு முயன்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. குழந்தையின் தாயைக் கைதுசெய்திருக்கிறோம். தந்தை தலைமறைவாக இருக்கிறார். அவரையும் தேடி வருகிறோம். மேலும், இவர்களிடம் குழந்தையை வாங்கியவர்மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விரைவில் குழந்தையை மீட்போம்” எனத் தெரிவித்தனர். ரீல்ஸ் போடுவதற்காக குழந்தையை விற்ற பெற்றோரின் இத்தகைய செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.