வத்திராயிருப்பு: சதுரகிரி மலையை ஒட்டிய ஊஞ்சக்கல் பகுதியில் நேற்று மாலை திடீரென பரவிய காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு உள்ள வனப்பகுதி 9 பீட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 5வது பீட்டில் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பற்றியது. மாலை நேரத்தில் காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது.
இதையடுத்து ரேஞ்சர் செல்லமணி, பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30 பேர் இரு குழுக்களாக பிரிந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டுத் தீயால் சதுரகிரி செல்லும் மலைப்பாதையிலோ, கோயிலிலோ பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த ஜூலை 15-ம் தேதி சாப்டூர் வனச்சரகம் 5வது பீட் தவசிப்பாறை பகுதியில் பரவிய காட்டுத் தீயால் சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அடிவாரம் திரும்புவதில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.