"டெல்லிக்கு உடனே வாங்க".. அண்ணாமலைக்கு பாஜக தலைமை திடீர் அழைப்பு.. அப்போ பாதயாத்திரை..?

மதுரை:
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரை நடைபெற்று வரும் நிலையில், அவரை உடனடியாக டெல்லிக்கு வருமாறு அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார். இதன்பேரில் பாத யாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த பாதயாத்திரை நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரில் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது மதுரையில் அண்ணாமலை பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.

ஆரம்பித்து வைத்த செல்லூர் ராஜு:
நன்றாக சென்று கொண்டிருந்த இந்த யாத்திரை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவால் திசை திரும்பியது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களுக்கு மோடி ஜி, அமித் ஷா ஜி தான் எல்லாமே. அண்ணாமலை எல்லாம் ஜஸ்ட் லைக் தட்.. அவ்வளவுதான்” என்றார். இது, தமிழக பாஜகவினரை கொந்தளிக்கச் செய்தது. மீண்டும் அதிமுகவை பாஜக தலைவர்கள் விமர்சிக்க, பாஜகவை அதிமுக தலைவர் எச்சரிக்க.. என்று மீண்டும் கூட்டணியில் மோதல் வெடித்தது.

மீண்டும் கூட்டணியில் விரிசல்:
இந்த சூழலில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு தராதரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை” என்றார். அண்ணாமலையில் இந்த பதிலால் கோபமடைந்த அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.

அவரச அழைப்பு:
இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அண்ணாமலையை அவசரமாக டெல்லிக்கு அழைத்திருக்கிறார். இதன்பேரில், தனது பாதயாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அண்ணாமலை டெல்லி புறப்பட்டிருக்கிறார்.

என்ன நடக்கும்?
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவின் தோளில் தான் பாஜக சவாரி செய்தாக வேண்டிய சூழல் இருப்பதால், அக்கட்சியை தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டும் என ஏற்கனவே அண்ணாமலைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில், மீண்டும் அதிமுக – பாஜக மோதல் உருவாகியுள்ளதால் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.