
ரஜினி, கமல், விஜய், அஜித் புகைப்படங்களைப் பகிர்ந்து வெங்கட் பிரபு வேண்டுகோள்
நண்பர்கள் தினம் இன்று ஆகஸ்ட் 6ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. உறவுகளை விடவும் நட்பைப் பெரிதும் மதிப்பவர்களாக இன்றைய தலைமுறையினர் இருக்கிறார்கள். அதே சமயம், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதும் அவர்கள்தான்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் ரசிகர்களின் சண்டை கடுமையாக இருந்தது. பின் படிப்படியாகக் குறைந்து தற்போது ஓரளவிற்கே உள்ளது. அதே சமயம் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை கடந்த சில வருடங்களாக எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது. புதிதாக ரஜினி, விஜய் ரசிகர்களின் சண்டை கடந்த சில மாதங்களாக ஆரம்பமாகி உள்ளது.
இந்நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, “மகிழ்ச்சியான நண்பர்கள் தினம்… அன்பைப் பரப்புங்கள்,” என்று குறிப்பிட்டு, ரஜினி, கமல், எஸ்பிபி மற்றும் அவரது மகன் சரண், தனது அப்பா கங்கை அமரன் ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், விஜய், அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய வெங்கட் பிரபு, இப்போது விஜய்யின் 68வது படத்தை இயக்க உள்ளார்.