பிரதமர் மோடி திருதராஷ்டிரா? ஆதி ரஞ்சன் சவுத்ரி சஸ்பென்ட்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது எதிக்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்தார்.

பிரதமர் மோடி பதில் அளிக்க தொடங்கி ஒன்றரை மணி நேரம் வரை மணிப்பூர் விவகாரம் குறித்து பேசவில்லை. இதனால் கடுப்பான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வந்தன. அப்போது பேசிய காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நம்பிக்கையில்லா தீர்மானம்தான் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது என்றார்.

மேலும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்பதுதான் தங்களின் கோரிக்கை என்ற அவர், எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை என காட்டமாக கூறினார். தொடர்ந்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடியை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டார்.

மன்னன் திருதராஷ்டிரன் பார்வையற்றவராக அமர்ந்திருந்த போது திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டதாக கூறிய அவர் இன்று நமது அரசனும் பார்வையற்றவராக அமர்ந்திருப்பதாக கூறினார். அவரது இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்களும் பாஜக எம்பிக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது குற்றம்சாட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.