‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேமியோ ரோலில் வந்தாலும் மோகன் லாலும், சிவராஜ் குமாரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, க்ளைமேக்ஸில் சிவராஜ்குமார் டிஸ்யூ பாக்ஸுடன் வரும் காட்சிதான் இணையத்தில் செம வைரல். ‘யார்யா இந்த மனுஷன், முரட்டு ஆளா வந்துட்டு இருக்கார்’னு படம் பார்க்கும்போது உங்களுக்கும் தோன்றியது என்றால் இந்த லிஸ்ட் உங்களுக்குத்தான். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த டாப் 10 திரைப்படங்கள் இதோ!
1. ஓம் (1995)

உப்பேந்திர ராவ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. சிவராஜ்குமார், ப்ரேமா ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் பெங்களூரில் இருக்கிற கேங்க்ஸ்டர்களின் பின்னணி குறித்து காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஒரு பத்திரிகையாளர் ‘ஓம்’ என்கிற புத்தகத்தை எழுதுவதற்காக பெங்களூருவில் உள்ள கேங்க்ஸ்டர்கள் குறித்து விசாரிக்க, அப்போது சத்யாவின் (சிவராஜ் குமார்) பின்னணியை தெரிந்து கொள்வதுதான் படத்தின் கதை.
2. ஆனந்த் (1986)

சிவராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகான அறிமுகமான திரைப்படம் ‘ஆனந்த’ தான். முன்னனி இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், சிவராஜ் குமாரின் சினிமா கரியருக்கு விதைபோட்ட படம் என்றும் சொல்லலாம். புனைபெயர்களில் கடிதம் எழுதி காதலிப்பவர்களை பற்றியது ‘ஆனந்த’ திரைப்படம்.
3.சிக்குரிடா கனாசு (2003)

ஷங்கர் (சிவராஜ்குமார்) தனது சொந்த ஊருக்கு சென்று அங்கேயே குடியேற ஆசைப்படும் போது தனது குடும்பத்திலிருந்து சில எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு. இயக்குநர் நாகபரணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் அறிமுகமான வித்யா வெங்கடேசன் நடித்திருப்பார்.
4.ஜோகி தி கிங்(2005)

கன்னட இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் உருவாகி 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘ஜோகி தி கிங்’. தந்தையின் மறைவுக்குப் பின் தாயை பார்த்துக்கொள்வதற்கு பொறுப்பான மகனாக நகரத்திற்கு செல்கிறார் மதேஷா (சிவராஜ் குமார்). அங்கு நிகழும் சில சம்பவங்களால் குற்றவாளியாக அவர் எப்படி மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. கன்னடத்தில் இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம்தான் ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’.
5. ஏ.கே 47 (1999)

போலீஸ் கமிஷ்னரை கொலை செய்ததாக கருதப்பட்டு ராமின் (சிவராஜ் குமார்) வாழ்க்கை கேள்விகுறியாகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் ஏ.கே 47 திரைப்படம். ஓம் பிரகாஷ் ராவ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம்தான் கன்னட திரையுலகில் DTS ஒலி அமைப்புடன் வெளிவந்த முதல் திரைப்படம்.
6. இன்ஸ்பெக்டர் விக்ரம் (1989)

தினேஷ் பாபு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் 1989-ம் ஆண்டு வெளியானது. இன்ஸ்பெக்டர் விக்ரமிற்கும் (சிவராஜ் குமார்) ஓய்வு பெற்ற ரானுவ அதிகாரிக்கும் இடையே நடக்கும் கதை தான் இன்ஸ்பெக்டர் விக்ரம். இத்திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதளவில் வரவேற்ப்பை பெறவில்லை. நாளடைவில் இத்திரைப்படத்தின் காமெடி காட்சிகளுக்காக அதிகளவில் பேசப்பட்டது.
7. கத்திப்புடி(2013)

நிம்மதியான வாழ்க்கைக்கு ஏங்கும் ஆனந்தை (சிவராஜ் குமார்) சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துவதுதான் ‘கத்திப்புடி’ படத்தின் கதை. கன்னட திரையுலகில் திரைப்படத்தின் பாடல்களில் நடன இயக்குநரின்றி நடிகர்களே பாடல்களுக்கு நடனத்தை கட்டமைப்பதை அறிமுகப்படுத்தியது இத்திரைப்படம்தான். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நியோ – நாயர் (Neo Noir) என்கிற களத்தை சிறப்புற பின்பற்றியதற்காக பாராட்டுகளை தன்வசமாக்கியது.
8. தகரு (2018)

இத்திரைப்படம் போலீஸ் அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் கேங்க்ஸ்டர்களுக்கும் இடையேயான குற்றப்பக்கத்தை பேசுவதாக அமைந்திருக்கும். ‘கத்திபுடி’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சூரியுடன் சிவராஜ் குமார் இணைந்த இரண்டாவது திரைப்படம் இது. இத்திரைப்படத்தின் திரைக்கதைக்காக பல பாராட்டுகளை பெற்றது. இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்திலிருந்து இன்ஸ்பயராகிதான் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் ‘கிராக்’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
9. கில்லிங் வீரப்பன் (2016)

வீரப்பனை கைது செய்வதற்காக ஆப்ரேஷன் கூக்கூனிற்கு சிறப்புபணிக்குழுவில் நியமிக்கப்பட்ட செந்தாமரை கண்ணனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் கில்லிங் வீரப்பன் திரைப்படம். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பெரிதளவில் வெற்றியை பெற்றது.
10. மஃப்டி (2017)

இந்த படத்தின் ரீமேக்தான் தமிழில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம். சிம்பு நடித்த ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்திருப்பார். கெளதம் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் ஸ்ரீ முரளி நடித்திருப்பார். மஃப்டியின் முன்கதையை சொல்லும் ‘ பாய்ரதி ரணகல்’ என்கிற தலைப்பில் உருவாகிவருகிறது.