நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

சேலம்: நாங்குநேரியில் மாணவரும், அவரது தங்கையும் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாணவர்களிடையே சாதிய வேறுபாட்டினை கலைந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவரையும், அவரது தங்கையும், மாணவரின் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் குமாரசாமிப்பட்டி அருகே செயல்படும் அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் பகுதியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் மாணவ, மாணவிகள் 20 பேர் மனித சங்கிலி அமைத்து, மாணவர்களிடையே வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஏற்பட வேண்டும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.