மேகவெடிப்பு, நிலச்சரிவு… இடிந்து விழுந்த சிம்லா சிவன் கோயில்… பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை!

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள சோலான் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிலரது வீடுகள் இரவோடு இரவாக அடித்து செல்லப்பட்டன. அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மீட்கப்பட்டனர். சிலர் மாயமானதாக தெரிகிறது.

சிம்லா நிலச்சரிவு

இதேபோல் சிம்லாவில் நிகழ்ந்த இரண்டு நிலச்சரிவு சம்பவங்களில் பாக்லி பகுதியின் சம்மர் ஹில் ஏரியாவில் அமைந்துள்ள சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் பலர் மாட்டிக் கொண்டதாக சொல்லப்படும் நிலையில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சிம்லாவில் 40க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. சிம்லா – தூத்லி சாலை சேதமடைந்திருக்கிறது. மண்டி – குல்லு சாலையின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகள் முடக்கம்

மண்டி – ஜன்ஜேஹ்லி சாலையின் பல இடங்கள் தடைபட்டுள்ளன. மண்டி – கார்சோக் சாலையும் சீராக இல்லை. மண்டி – தரம்பூர், தரம்பூர் – சர்காகத், பாகி – காகல் – மண்டி, நெர்சவுக் – கல்கார் ஆகிய சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 751 சாலைகள் முடங்கியுள்ளன. சம்மர் ஹில் ஏரியாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலச்சரிவில் 20 முதல் 25 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும். ஆற்றின் கரையோரம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். மழை நின்ற உடன் விரைவாக மீட்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மண்டி, சிம்லா உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஆகஸ்ட் 14) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக மிக கனமழைக்கு வாய்ப்பு

இதற்கிடையில் ஹிமாச்சல் பிரதேசத்தின் ஒருசில இடங்களில் மிகக் கனமழையும், பல இடங்களில் பரவலானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சம்பா, கங்ரா, மண்டி, சிம்லா, குல்லு, லாஹுல்-ஸ்பிடி, சிர்மாவூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

நந்தாகினி ஆற்றில் வெள்ளம்

பிபல்கோடி மலையில் இருந்து வெள்ள நீரில் ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல்வேறு சாலைகள் மூழ்கியதால் மூடப்பட்டுள்ளன. நந்தா நகர் பகுதியில் நந்தாகினி ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.