கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாறுதா?- வேண்டவே வேண்டாம்.. காரணங்களை அடுக்கிய விஜயகாந்த்

கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் 85 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் காய்கறிகள் இங்கு வந்து சேரும். அதன்பிறகு சில்லறை வியாபாரிகள் தத்தமது பகுதிகளுக்கு வாங்கிச் செல்வர். இந்த நிலையில் சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் கோயம்பேடு சந்தையால் நெரிசல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

திருமழிசையில் பிரமாண்டமாக மார்க்கெட் அமைக்க வடிவமைப்பை தயார் செய்யவும் நடவடிக்கைகள் சிஎம்டிஏவால் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தை இருக்கும் இடத்தில் வணிக வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபாரிகள் பெரும்பாலும் கடையை சொந்தமாக வாங்கி நடத்தி வந்தனர். இந்த தகவல் கோயம்பேடு வியாபாரிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோயம்பேடு சந்தை சென்னையின் முக்கிய இடத்தில் இருப்பதால் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி காய்கறி, பழங்கள், பூக்களை வாங்கிச் செல்கிறார்கள். வியாபாரமும் அதிகமாக இருப்பதால் வணிகர்களும் நல்ல லாபமடைந்து வருகிறார்கள். இதற்கு முன்பு கொரோனா காலத்தில் நெரிசல் ஆபாயம் காரணமாக கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டபோது, வியாபாரிகளும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று சுட்டிக்காட்டினார்.

இதனால் கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் யோசனை நிச்சயம் பலனளிக்காது. ஆகவே, அப்படி மாற்றினால் அது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கு இன்னல்களையும் கஷ்டங்களையும் தான் அளிக்குமே தவிர வேறு எந்த ஆதாயமும் வராது. ஆகவே, கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் முடிவை சிஎம்டிஏ கைவிட வேண்டும். வணிகர்களையும் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்ற வேண்டும் என்றால் வியாபாரிகளுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பிறகு கருத்துகள் கேட்கப்படும். ஆனால், தமிழ்நாடு அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோயம்பேடு மார்க்கெட் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.