முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போதை நபரை தட்டித் தூக்கிய போலீஸ்..

முதலமைச்சர் வீட்டுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உதயநிதியும் அவருடன் வசித்து வந்த நிலையில் அமைச்சரனாதால் அவரை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் காணப்பட்டதால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பங்களாவுக்கு இடம்பெயர்ந்தார். முதலமைச்சர் வீட்டு முன்பு தற்போது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் ஆழ்வார்பேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று பகீர் கிளப்பிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

உடனடியாக ஆக்‌ஷனின் இறங்கியது சென்னை போலீஸ். காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக முதல்வர் வீட்டுக்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் இஞ்ச் பை இஞ்சாக சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது. இதனையடுத்துதான் வெடிகுண்டு நிபுணர்களும், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்புகொண்ட செல்போன் எண்ணை வைத்து சோதித்ததில் அது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது உச்சம்பாறையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர்தான் எனவும் மதுபோதையில் இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. அவரை பூதப்பாண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.