நடிகர் தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனாவுக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் அபராஜித்துக்கும் இன்று சென்னையில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
நடிகர் தலைவாசல் விஜய்யின் மூத்த மகள் ஜெயவீனா. இவர் சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வமுடையவராய் திக்ழந்தார். இவருடைய நீச்சல் ஆர்வத்துக்காகவே மகள் கலந்துகொள்ளும் போட்டிகளில் ஒரு தந்தையாக உடன் செல்ல வேண்டி, தன்னுடைய பல சினிமா, சீரியல் வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தார் விஜய்.

ஜெயவீனாவும் நீச்சல் போட்டியில் தமிழ்நாடு தாண்டி சர்வதேச அளவில் பங்கு கொண்டு பதக்கங்களை வென்று வருகிறார். நேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு பதக்கம் பெற்றார்.
தன்னுடைய 17 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் அபராஜித். இவருடைய தந்தை டாக்டர் பாபா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர்.

2012ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் அபராஜித்துக்கு முக்கியப் பங்கு உண்டு, 2013ம் ஆண்டு நடந்து துலிப் கோப்பைப் போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.
ஜெயவீனாவும் அபராஜித்தும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே, சில மாதங்களுக்கு முன்பு இவர்களது நிச்சயதார்த்தம் இருவீட்டார் முன்னிலையில் சிம்பிளாக நடந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று மாலை இவர்களது திருமண வரவேற்பும் இன்று காலை திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

அபராஜித்தின் கிரிக்கெட் நண்பர்கள் மற்றும் தலைவாசல் விஜய்யின் சினிமா வட்டாரத்தினருக்காக விரைவில் தனியாக வரவேற்பு நிகழ்ச்சி இருக்கலாமெனவும் சொல்லப்படுகிறது.