கல்லூரியில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டே இல்லையாம்.. சென்னை போலீஸ் அளித்த புது விளக்கம்!

சென்னை
:
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே நீண்டநாட்களாக மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இரு வேறு டிபார்ட்மெண்டுகளில் பயிலும் மாணவர்களில் யார் பெரிய ஆள் என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது.

இந்த சூழலில், இன்று இருதரப்பு மாணவர்களும் மீண்டும் மோதிக்கொண்டனர். அப்போது ஒருதரப்பு மாணவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. படிக்கும் மாணவர்கள் ரவுடிகளை போல வெடிகுண்டுகளை வீசுகிறார்களே என்ற பேச்சு பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கையும் இந்த சம்பவம் கேள்விக்குறியாக்கியது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை வைத்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் கூறுகையில், “சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான மோதலில் வீசப்பட்டது அனைவரும் நினைப்பதை போல நாட்டு வெடிகுண்டு அல்ல. அது திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு ஆகும். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு மாணவரை தேடி வருகிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.