King of Kotha Review: `இது அதுல?' மீண்டும் ஒரு டெம்ப்ளேட் கேங்ஸ்டர் படம்! துல்கர் காப்பாற்றுகிறாரா?

ரவுடிகள் அராஜகம் தலைவிரித்தாடும் கொத்தை என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ‘கண்டிப்பான’ காவல்துறை அதிகாரியான ஷாகுல் (பிரசன்னா). கொத்தையை சர்வ அதிகாரங்களுடன் கட்டியாலும் கண்ணன் பாயை (ஷபீர்) ஒழித்துக்கட்ட முயலும் ஷாகுலை அவமானப்படுத்துகிறான் கண்ணன் பாய். அவனைப் பழிவாங்கத் துடிக்கும் ஷாகுலுக்கு, மக்களின் ஆதரவு பெற்ற கோத்தையின் முன்னாள் டானும், கண்ணன் பாயின் முன்னாள் உற்ற நண்பனுமான ராஜுவை (துல்கர் சல்மான்) பற்றித் தெரிய வருகிறது.

King of Kotha Review

கண்ணன் பாயையும் அவனின் ரவுடிகள் அணியான கே-டீமையும் அழிக்க, பல ஆண்டுகளுக்கு முன்னாள் கொத்தையை விட்டு வெளியேறிய ராஜுவைக் கண்டுபிடித்து கொத்தைக்கு வரவழைக்கிறார் ஷாகுல். கண்ணன் பாயே அஞ்சும் ராஜு யார், இரண்டு நண்பர்களின் கதை என்ன, ராஜு ஏன் கொத்தையை விட்டு வெளியேறினார், ராஜுவின் வருகை கண்ணன் பாயையும் கொத்தையையும் எப்படி மாற்றிப்போட்டது என்பதைப் பேசுகிறது அபிலாஷ் ஜோஷியின் ‘கிங் ஆஃப் கோதா’.

துடிப்பான ரவுடியாக மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அழகாகப் பொருந்திப்போகிறார் துல்கர் சல்மான். பிளாஷ்பேக் காட்சிகளில் அவரின் இயல்பான உடல்மொழி மட்டுமே வெளிப்பட்டாலும், இரண்டாம் பாதியில் சற்றே முதிர்ச்சி காட்டியிருக்கிறார். ‘கிங்’ என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ‘பிரின்ஸ்’ ஆக ஈர்க்கிறார். கதாநாயகனுடன் சரிசமமாகப் பயணிக்கும் கண்ணன் பாயாக ஷபீர் தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார். ஒரு டானுக்கான உடல்மொழியை கண்முன் கொண்டுவந்து மிரட்டியதோடு, ஏற்றயிறக்கங்கள் நிறைந்த ஒரு டான் கதாபாத்திரத்தின் மொத்த வாழ்க்கைப் பயணத்தையும் தன் நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக பிரசன்னா தொடக்கத்தில் ஆர்வமூட்டினாலும், சிறிது நேரத்திலேயே அக்கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் அடங்கிவிடுகிறது.

King of Kotha Review

துல்கரின் நண்பராகவும் காவல்துறை அதிகாரியாகவும் வரும் கோகுல் சுரேஷ், கதாநாயகனின் கதையை ஒப்பிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார். ஐஸ்வரியா லெட்சுமி, செம்பன் விநோத், நைலா உஷா, ஷம்மி திலகன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஷம்மி திலகன் இரண்டு மாஸ் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

ஆக்‌ஷனும் பரபரப்பும் மட்டுமல்லாமல் துரோகம், பிரிவு, காதல், குடும்பம், நட்பு என ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இரண்டு டான்களின் கதையைப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். முதற்பாதியில், கதாநாயகனுக்கு டன் கணக்காக பில்டப் சீன்களால் புகழ்பாடிக்கொண்டே இருக்கிறார்கள். இது தொடக்கத்தில் ஆர்வத்தைத் தூண்டினாலும், ஒருகட்டத்தில் ‘பேசிகிட்டே இருக்காங்களே தவிர, பாம்பை வெளியே விட மாட்றாங்களே!’ என்று கமென்ட் அடிக்கத் தோன்றுகிறது. ஒருவழியாகத் திரைக்கதை கிங் ஆஃப் கோதாவான ராஜுவை விவரிக்கத் தொடங்கினாலும், அங்கும் பில்டப் காட்சிகளை மட்டுமே சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு பராக்கிரமங்களைக் கொண்ட ராஜுதான் ‘கிங்’ என்பதைப் பதிய வைக்க எந்த அழுத்தமான காட்சியும் வைக்கப்படவில்லை.

King of Kotha Review

`நல்ல மனம்’ கொண்ட டான் ஹீரோ, சாகசங்கள் செய்யும் ஆக்‌ஷன் ஹீரோ என வழமையான சினிமா டானாகவே துல்கர் வருகிறார். `இவர் டானாக இருப்பதற்கு என்ன தொழில் செய்கிறார்?, கொத்தையின் பக்கத்திலேயே இருக்கும் மீன்பிடி துறைமுகத்தில் இவரின் பங்கு என்ன?, இத்தனை களேபரங்கள் நடந்தாலும் அரசியல்வாதிகள் – காவல்துறையினர் தலையிட மாட்டார்களா?, மக்கள் எதற்காக இவரை மட்டும் கொண்டாடுகிறார்கள்?’ எனத் தொடக்கத்திலேயே கேள்விகள் எழ ஆரம்பித்துவிடுகின்றன. மேலும், தேவையில்லாத காட்சிகளால் நீண்டுகொண்டே போகும் முதற்பாதி, ஒரு முழு படத்தைப் பார்க்கும் அலுப்பைத் தருகிறது.

கதாநாயகன் ராஜுவின் கதாபாத்திரத்தை விட வில்லன் கண்ணன் பாய் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களும் அவர் டானாக மாறிய கதையும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அதைச் சரியாக உள்வாங்கி அக்கதாபாத்திரத்தை அழகாக மெருகேற்றியதோடு, இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடையும் இடங்களிலும் படத்தைக் காப்பாற்றுகிறார் சபீர். ஒரு முன்னாள் டான் பல ஆண்டுகளுக்குப் பின் தன் ஊருக்குத் திரும்பி, தன் இழந்த வாழ்க்கையை அசைப்போடும் இடங்களையும் குற்றவுணர்வுக்குள்ளாகும் இடங்களையும் அழகாகத் திரைக்கதையில் கோத்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி. அந்த எழுத்துக்கு துல்கர் சல்மானும் நியாயம் செய்திருக்கிறார்.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. முக்கியமாக இரவு நேரக் காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும் அழுத்தமாகத் தன் பெயரைப் பதிக்கிறார். தன் பின்னணியிசையால் மொத்த படத்திற்கும் உயிரூட்டியிருக்கிறார் ஜாக்ஸ் பிஜாய். ஒளிப்பதிவாளர் மற்றும் ஜாக்ஸ் பிஜாயின் கூட்டணிதான் நிஜமான ‘கிங்ஸ் ஆஃப் கோதா’வாக ஜொலிக்கிறது.

King of Kotha Review

பின்கதை காட்சிகளையும் இரண்டாம் பாதியையும் இன்னும் கூடுதல் கவனத்தோடு படத்தொகுப்பாளர் உமா சங்கர் தொகுத்து கூறுபடுத்தியிருக்கலாம். கொத்தை என்கிற மொத்த ஊரின் அமைப்புமே முழுக்க செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது படத்தின் கலை இயக்கம். அந்த ஊரில் யார் வீட்டிலும் டியூப்லைட்டோ, வெள்ளை நிற விளக்குகளோ இல்லையா என்று கேட்கும் அளவுக்கு மஞ்சள் வெளிச்சத்தை மட்டுமே வாரி இறைத்திருக்கிறார்கள். மோகன் லாலின் ‘ஸ்படிகம்’ போன்ற மலையாள சினிமா போஸ்டர்களும், ஒனிடா விளம்பரங்களும் துறுத்திக்கொண்டு நிற்கின்றன. மரடோனா படங்கள் நிறைந்த கால் பந்து மைதானங்களும் அதன் கொண்டாட்டமும் மட்டும் எதார்த்தத்துடன் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் திரைக்கதை இறுதிக்காட்சியை நோக்கி நகர்ந்தாலும், கூடுதல் பில்டப்புகளாலும் தேவையில்லாத காட்சிகளாலும் இரண்டாம் பாதியை இழுத்துக்கொண்டே போகிறார் இயக்குநர். அந்த பில்டப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையிலும் எந்தக் காட்சியும் இல்லை. அதனால், இரண்டாம் பாதியின் இறுதிப்பகுதி ‘சோதனை மேல் சோதனை’யாக நோகடிக்கிறது. அதேபோல பெண்கள் குறித்து கொச்சையான வார்த்தைகளையும் சித்திரிப்புகளையும் தவிர்த்திருக்கலாம்.

King of Kotha Review

புதியதொரு கற்பனை நகரத்தில் நடக்கும் கேங்ஸ்டர் சினிமா என்ற அளவில் படத்தின் களம் கவனிக்க வைத்தாலும், பில்டப்புக்கு `கே.ஜி.எஃப்’, கேங்ஸ்டர் ரெஃபரன்ஸுக்கு `விக்ரம்’, நாயகனின் பில்டப் கதைக்கு `புஷ்பா’, படத்தின் மையக்கருவுக்கு `ஜெமினி’ என்பதாகப் பல இடங்களில் `இது அதுல்ல’ என்று யோசிக்க வைக்கிறது இந்த `கிங் ஆஃப் கோதா’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.