`மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அ.தி.மு.க தலைமை என் வசம் தான் என்று நிரூபித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என மகிழ்ச்சி வெளியிட்டு வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இம்மாநாட்டு வெற்றிக்கு தென் மாவட்ட கட்சிக்காரர்களை நம்பியதை காட்டிலும், தனது கொங்கு மண்டலத்து ரத்தத்தின் ரத்தங்களை நம்பியது தான் அதிகம் என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். மாநாட்டுக்கு பெரும்பாலான மக்கள் கூட்டம் கொங்கு மண்டலத்தில் இருந்து குறிப்பாக, அவரின் சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து தான் கூட்டமே அதிகம் சென்றுள்ளது என்கிறார்கள். இதனை ஏற்பாடு செய்தது அதிமுக-வின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரான இளங்கோவன் தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மாநாட்டை முடித்த கையாக எடப்பாடிக்கு குட் நியூஸ் கிடைக்கும் என்று தொண்டர்கள் எண்ணியிருந்த வேளையில், ஒரு ஷாக் நியூஸ் கிடைத்ததால் அனைவருமே அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். அது என்னவென்றால் கொடநாடு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் எடப்பாடியாருக்கு எதிராக அளித்த பேட்டிதான்.
அப்படி என்ன பேசினார் தனபால்… “கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆத்தூர் இளங்கோவனுக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் கூறியதால் தான் எனது தம்பி கனகராஜ் கொடநாடு சென்று ஐந்து பேக்குகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். மூன்று பேக்குகள் சங்ககிரி சேர்ந்த ஒருவரிடமும், இரண்டு பேக் சேலத்தை சேர்ந்தவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும், இளங்கோவனுக்கும் முழு பங்கு உள்ளது.

அவர்களை இதுவரை காவல்துறை ஏன் விசாரிக்கவில்லை. அவரைகளை விசாரித்தால் பல உண்மைகள் வரும்” என்று கூறினார். மேலும், `காவல் ஆய்வாளர் ஒருவர் எனது செல்போனை எடுத்துக் கொண்டார். அதில், சில முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதை சிபிசிஐடி காவல்துறையிடம் தெரிவிக்க தயாராக உள்ளேன். இதுவரை நான் தெரிவிக்காமல் இருந்ததற்கு காரணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அதனால் கொடநாடு கொலை வழக்கு குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தேன். தற்போது முதல்வர் என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் உண்மைகளை சொல்கிறேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளது. எனவே தமிழக முதல்வர் ’தளபதியார்’ தான் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.” எனக் கூறினார். மேலும், தனது தம்பி கனகராஜ் விபத்தில் இறந்தது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY