பட்டுக்கோட்டையில் பெண் ஒருவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ரத்தப்போக்கு அதிகமாகியிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து வாளியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி வசந்தி வயது 38. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.
கணவருக்குப் போதிய வருமானம் இல்லை. வறுமையான சூழலில் குடும்பம் இருக்கிறது. ஐந்து பிள்ளைகளுக்கும் ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்க முடியவில்லை. இதில் ஆறாவது குழந்தை பிறக்கப் போகிறது, அதை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கவலையில் வசந்தி அக்கம், பக்கத்தில் புலம்பி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வசந்தி தனக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதாகக் கூறி அலறியிருக்கிறார். இதையடுத்து அவரின் கணவர் செந்தில் வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தார். உடன் உறவினர்கள் சிலரும் சென்றுள்ளனர். இதையடுத்து வசந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்த நிலையில், அவர் இறந்துவிட்டார்.
பின்னர், மருத்துவமனையில் முறையாக தகவல் தெரிவிக்காமல் வசந்தி உடலை, அவரின் உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். செந்தில் மற்றும் வசந்தியின் உறவினர்கள் நடவடிக்கையில் டாக்டர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், சொல்லாமல் உடலை எடுத்துச் சென்றதும் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் செந்தில் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஒரு வாளியில் ரத்தகரை இருந்துள்ளது. உடனே வாளியை திறந்து பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்ப்பட்டது.
அதில் வாயில் துணி வைத்து அமுக்கப்பட்ட நிலையில் பிறந்த பச்ச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் இருந்துள்ளது. சடலத்தை தூக்கி போலீஸார் பார்த்தபோது குழந்தையின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், “வசந்திக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், ஆறாவது குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற கவலை இருந்துள்ளது. மேலும் பிரசவத்திற்கான செலவுக்கும் பணம் இல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வசந்திக்கு அவர் கணவர் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் வசந்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாக தெரிகிறது. குழந்தையை வளர்க்க முடியாது என முடிவெடுத்து, அவர்கள் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலைசெய்து சடலத்தை வாளியில் அமுக்கி விட்டார்களா அல்லது வீட்டில் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து பிறந்ததா என்பது விசாரணையில் தெரியவரும்.

குழந்தையில் வாயில் துணி அமுக்கப்பட்டிருந்தது. கயிற்றில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும்போது குழந்தை கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு, ரத்தப்போக்கு அதிகமானதால் வசந்தியை மருத்துவமனையில் சேர்க்க… அங்கு அவர் இறந்துவிட்டார். பயத்தில் என்ன செய்வதென தெரியாமல் சொல்லாமல் உடலை எடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகுதான் இது குறித்து முழு விவரம் தெரியவரும்” என்றனர்.