சீருடை அளவு எடுப்பதாக கூறி 100 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – 2 தையல்காரர்கள் மீது வழக்கு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டம் காதிமாவில் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 120 பெண்கள் உள்பட 250 பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் தைக்க ஷகீல் மற்றும் முகமது உமர் என்ற இரண்டு தையல்காரர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த இரண்டு தையல்காரர்களும் சீருடைக்கான அளவு எடுக்கும்போது சுமார் 100 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பள்ளிக்கூடத்தின் பெற்றோர் சங்கத் தலைவர் ராஜ்பீர் சிங் ராணா போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் ஷகீல் மற்றும் முகமது உமர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பள்ளியின் 3 ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று உள்ளது. அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து உள்ளனர். இவர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.