மணிசித்திரதாழ் 2ம் பாகம் இருக்கா? : பாசிலிடம் கேட்ட மோகன்லால்

மலையாள திரையுலகின் சீனியர் இயக்குனரான பாசில் இங்கே தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பாசில் டைரக்ஷனில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோர் நடித்த மணிசித்திரதாழ் திரைப்படம் வெளியானது. அதுவரை வெளியான பாசிலின் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து கன்னடத்தில் இந்த படத்தை ரீமேக் செய்து இயக்கிய பி.வாசு பின்னர் தமிழிலும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி என்கிற பெயரில் ரீமேக் செய்து மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றினார். இதைத்தொடர்ந்து தெலுங்கிலும், ஹிந்தியிலும் கூட இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

அதன் பிறகு இயக்குனர் பி.வாசுவே இந்த படத்தின் இரண்டாம் பாகங்களையும் கன்னடத்திலும் தெலுங்கிலும் எடுத்து முடித்துவிட்டு தற்போது தமிழிலும் சந்திரமுகி 2 என்கிற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார். அந்த படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் பாசில், மோகன்லால், ஷோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாசிலுடன் மேடை ஏறிய மோகன்லால், அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்தினார் என்பது குறித்து நன்றி உணர்வுடன் வெளிப்படுத்தினார். மேலும் ஷோபனாவும் இங்கே இருப்பதால் உங்களிடம் நேரடியாகவே கேட்டு விடுகிறேன். மணிசித்திரதாழ் படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறதா? இல்லையா என்று கேட்டார். அந்த கேள்விக்கு கீழே அமர்ந்திருந்த ஷோபனாவும் உற்சாகமாக கைதட்டினார்.

ஆனால் இந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் பாசில், “மணிசித்திரதாழ் நானே எதிர்பாராத ஒரு கிளாசிக் படமாக அமைந்து விட்டது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டுமென்றால் தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) டெக்னாலஜியை பயன்படுத்தி உங்களையெல்லாம் 30 வருடத்திற்கு முன்பு இருந்தது போல மாற்ற முடிந்தால் இரண்டாம் பாகம் எடுக்கலாம். அதற்கான வழி ஏதாவது இருக்கிறதா என பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.