மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… வங்கிகள் அபராதம் விதித்தது ஏன்?

 தமிழகம் முழுவதும் ` கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்தது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளை தமிழக அரசு தேர்வு செய்தது.

ஸ்டாலின்

அண்ணா பிறந்த நாளான நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் 13 பெண்களுக்கு  ஏடிஎம் கார்டு போன்ற அட்டையை முதலமைச்சர் வழங்கினார், நேற்று முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

நேற்று உரிமைத் தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்ட உடனே  ஏராளமான பெண்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தது. பெண்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம்  நீடிக்கவில்லை; அடுத்த சில நிமிடங்களில் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்ந்த பணத்தை, மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வங்கிகள் அபராதம் கட்டணமாக எடுத்துக் கொண்ட குறுஞ்செய்தியும் வந்தது.

வைரல் ஆன வடிவேல் மீம்ஸ்…

இந்த திட்டம் துவங்கிய உடனேயே நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். “மினிமம் பேலன்ஸ் இல்லன்னு சொல்லி அந்த ஆயிரத்தை ஆட்டைய போட்டுறாத தெய்வமே”.. என்று அவர்கள் வெளியிட்ட வடிவேல் மீம்ஸ் வாட்ஸ்அப்பில் வைரல் ஆனது, அது அப்படியே நடந்தும் விட்டது.

இத்திட்டத்தில் விண்ணபித்த பெண்கள் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களே, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்பது பெரியத் தொகையே. அவர்களால் வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.1000/- அல்லது ரூ.2000/- த்தை குறைந்த பட்ச இருப்பாக வைத்துக் கொண்டு வங்கிக் கணக்கை பராமரிப்பது மிகவும் சிரமமானதே. இதனால் பெரும்பாலான பெண்கள் அவர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

இப்படி மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வங்கி விதிகளின்படி, அந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வந்த உடன், அபராதத் தொகையை வங்கிகள் தன்னிச்சையாக எடுத்துக் கொள்ளும்.

தமிழக அரசு அளித்த உரிமைத் தொகை ரூ.1,000-த்தை வங்கிகள் இப்படி எடுத்துக்கொண்டன. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை.. தமிழக அரசுதான் இதற்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தவிர்க்க என்ன வழி..?

ஜன்தன்கணக்கு தவிர பிற வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையை பாராமரிப்பது காட்டாயம் ஆகும். இல்லாவிட்டால், வங்கிகள் இப்படி அபராதம் விதிப்பது வழக்கம்.

வங்கிக் கணக்குகள் அனைத்தையும் கணினிமூலம் ஆன்லைனில் வங்கிகள் பராமரித்து வருகின்றன. முன்கூட்டியே ‘புரோகிராமிங்’ செய்துள்ளபடியால், அபராதம், சேவைக்கட்டணம், குறுஞ்செய்தி கட்டணம் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் பணம் வந்த உடன் தாமாகவே எடுத்துக் கொள்ளும். வங்கிக் கணக்கு தொடங்கும்போதே, இதற்காக வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் கையெழுத்தை வங்கிகள் விண்ணப்பத்துடன் பெற்றுக் கொள்கிறது.

வங்கிகள்

இதன் அடிப்படையில், உரிமைத் தொகை ரூ.1,000 வந்த உடன், அபராதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் அதன் விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட்டுள்ளன.

ஆனால் இந்த பிரச்னையை தவிர்க்க வழிமுறை உண்டு, குறைந்தபட்ச பேலன்ஸ் வைத்திருக்க முடியாதவர்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்கை (ஜந்தன் கணக்கு) திறந்து கொள்ளலாம். இந்த கணக்கை பொறுத்தவரை எந்தவித குறைந்தபட்ச பேலன்ஸும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இந்தக் கணக்கில் ரூ.50,000 வரைதான் வைப்பு வைத்திருக்க முடியும் மற்றும் ஒரு மாதத்துக்கு நான்கு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். எனவே பயனாளிகள் இந்த திட்டங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் வங்கிக் கணக்கை தேர்வு செய்ய வேண்டும். என்று வங்கியாளர் தரப்பில் இருந்து விளக்கம் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.