புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று மக்களவையில் நிறைவேற்றிய பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில், “அரசியலமைப்பு (128வது திருத்தம்) மசோதா, 2023-ஐ இவ்வளவு சிறப்பான ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘நாரி சக்தி வந்தன் ஆதினியம்’ இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும். இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதை மேலும் அதிகரிக்கும். மேலும் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்கள் இன்னும் அதிக அளவில் பங்கேற்பதற்கு உதவும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.