இனி நீட் தற்கொலை நிகழ்ந்தால் அதற்கு உதயநிதி ஸ்டாலின்தான் பொறுப்பு: ஆர்.பி. உதயகுமார்

மதுரை: நீட் தேர்வை ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்கும் நாடகத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “உதயநிதி ஸ்டாலின் வருகையால் கடந்த இரண்டு நாட்களாக மதுரை அல்லோலப்பட்டு வருகிறது. மதுரையில் தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம்; அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது, ரெண்டரை ஆண்டு காலம் கையெழுத்து போடாமல், தற்போது மதுரையில் நீட்டை ரத்து செய்ய ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறுவோம் என்று கூறுகிறார். கையெழுத்து போட தயாரா என்று எனக்கு சவால் விட்டு உள்ளார்.

அவரின் பக்குவபடாத கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். நீட் தேர்வை ஒரே கையெழுத்து மூலம் ரத்து செய்வன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஒரு கோடி பேரின் கையெழுத்து தேவை என கூறுவது ஏன்? இதன் மூலம் திமுக தோல்வி அடைந்து விட்டது என்பதை உதயநிதி ஒப்புக்கொள்ளத் தயாரா? நீட் தேர்வு குறித்து ரகசியம் கேட்டால், எய்ம்ஸ் ரகசியத்தை வெளியிட தயாரா என்று பச்சைக் குழந்தை போல் கேள்வி எழுப்பி உள்ளார். அதிகாரத்தில் நீங்கள் தான் உள்ளீர்கள், கேட்கும் இடத்தில் நாங்கள் உள்ளோம்.

ஐந்து முறை தமிழகத்தில் திமுக ஆட்சி செய்த பொழுது எய்ம்ஸ் குறித்து கோரிக்கை வைத்து இருக்கிறீர்களா? இன்றைக்கு நீட் தேர்வில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு நீங்கள் சொன்ன ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற கூறிய வாக்குறுதி தான் காரணம். இதனால் மக்கள் உங்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

நீங்கள் கேட்ட எய்ம்ஸ் ரகசியத்தை நான் கூறுகிறேன், நீங்கள் ஒருமுறை கூட எய்ம்ஸ் தேவை என்று குரல் கொடுக்கவில்லை, ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில் இதற்காக 224 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது இதற்காக 1,264 கோடி நிதி ஒதுக்கப் பட்டதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் கட்டும் இடத்தில் மண் பரிசோதனைகாக்க நாக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இது கட்டிடம் கட்ட ஏற்ற இடம் என்று அனுமதி பெறப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய மருத்துவ கட்டுமான அதிகாரிகள் பார்வையிட்டு 2018ம் ஆண்டு கட்டிட அனுமதியை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பாரதப் பிரதமரை அழைத்து வந்து எடப்பாடியார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனம் இடத்தை ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து மேலும் 5 ஏக்கர் நிலம் சாலை பணிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மத்திய சாலை நிதி திட்டத்தின் மூலம் 21 கோடியே 20 லட்சம் மதிப்பில் 6.4 கிலோ மீட்டரில் சாலைகள் அமைத்தும், 10 கோடியில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்று சுவர் அமைக்கப்பட்டது.

இந்த ரகசியத்தை அறியாதவர் எய்ம்ஸ் கல்லை தூக்கிக் கொண்டு ரகசியத்தை செல்ல முடியுமா என்று கூறி வருகிறார். ஆளும் கட்சியாக உள்ள நீங்கள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து கொண்டு வர வேண்டாமா? உங்கள் பேச்சால் மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்கும் நாடகத்தை மக்கள் ஒரு போதும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள்.

இந்த ஒரு கோடி கையெழுத்து ரகசியம் என்ன? இதன் மூலம் உதயநிதி தோல்வியை ஒப்புக்கொள்ள முன் வருவாரா? திமுக தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் அப்போதுதான் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியும். மீண்டும் நீட் தேர்வில் யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு உதயநிதி ஸ்டாலின்தான் காரணம். தற்கொலையை தடுத்து நிறுத்த நீட் தேர்வு தோல்வியை திமுக ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் விடுக்கும் எந்த சவாலையும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். மக்களிடம் கையெழுத்து வாங்குவது என்பது முற்றிலும் ஏமாற்று வேலை. பொறுப்பான இடத்தில் உள்ள நீங்கள் பொறுப்பான பதிலை மக்களுக்கு தரவேண்டும். இல்லை என்றால் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்” என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.