ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி,

மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.

அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ம் தேதியும், தெலங்கானாவுக்கு நவம்பர் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.