வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் திருட்டு; காட்டிக்கொடுத்த சிசிடிவி – சிக்கிய பெண்!

சென்னை கிண்டி சிட்கோ பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மண்டல மேலாளராக, பங்கிம் கபூர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 7-ம் தேதி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `நான் மேற்கண்ட வங்கியில் மண்டல மேலாளராக கடந்த மே மாதம் 2023-லிருந்து வேலை செய்து வருகிறேன். என்னுடைய மேற்பார்வையில் 39 வங்கிக் கிளைகள் இருக்கின்றன. அதில் சோழிங்கநல்லூர் கிளையும் ஒன்றாகும். எங்கள் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்று வருவதுண்டு. சோழிங்கநல்லூர் வங்கிக் கிளையில் கடந்த இரண்டு மாதங்களாக தியாகராஜன் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை சுழற்சி முறையில் எல்லா வங்கிக் கிளைகளிலும் அடகு வைத்த தங்க நகைகள் சரியாக இருக்கின்றனவா என்று ஆடிட் செய்வது வழக்கம். அதன்படி சோழிங்கநல்லூரிலுள்ள கிளையில் ஆடிட் செய்யப்பட்டது.

தங்க நகைகள்

அப்போது சில வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகளுக்கும் வங்கியிலிருந்த தங்க நகைகளுக்கும் எடையில் வித்தியாசம் காணப்பட்டது. அது தொடர்பாக 6.10.2023-ம் தேதி வங்கியின் மேலாளர் தியாகராஜன் எனக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வங்கியில் ஒரு வாடிக்கையாளர் வைத்த தங்க நகைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது அந்த வாடிக்கையாளர் அடகு வைத்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தங்க நகைகளின் எடையைவிட வங்கியில் சீல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளின் எடை குறைவாக இருந்தது. அதனால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நான் சென்று அடகு வைக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் ஆய்வு செய்தேன்.

அப்போது 26 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகளில் சுமார் 431.37 கிராம் எடையுள்ள தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த 4 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் மூலம் வங்கியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் லூர்து மேரி என்பவர் அடகு வைத்த தங்க நகைகளை பல்வேறு தேதிகளில் திருடிச் செல்வது தெரியவந்தது. எனவே, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தங்க நகைகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கைது

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவுசெய்து, தூய்மைப் பணியாளர் லூர்துமேரியிடம் விசாரித்தார். அப்போது அவர் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்து, தங்க நகைகளையும் மீட்டனர். கைதுசெய்யப்பட்ட லூர்து மேரி, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.