ஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு| Supreme Court order in Sterlite plant case

புதுடில்லி துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக, வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, பிரத்யேகமாக இரண்டு தேதிகளை ஒதுக்கும்படி, நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

தமிழகத்தின் துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டங்கள் நடந்தன.

மனு தாக்கல்

கடந்த 2018 மே 22ல் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், கழிவுகளை அகற்றவும் அனுமதி கேட்டு, வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அதன்படி, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், ‘ஜிப்சம்’ கழிவுகளை அகற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதே நேரம், ஆலையில் உள்ள கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி மறுத்துள்ளது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோரிக்கை

இது தொடர்பாக விரைந்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் விரைந்து முடிவெடுக்கும்படி வேதாந்தா குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு பிரத்யேகமான இரண்டு தேதிகளை ஒதுக்கும்படி நீதிமன்ற பதிவாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.