சென்னை ராமாபுரத்தில் அரசமரம் சந்திப்பு என்பது முக்கியமான பிரதான சாலையாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரசமர சந்திப்பில் பேருந்து நிறுத்தமும் அமைந்திருக்கிறது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில், பிராட்வேக்குச் செல்லக்கூடிய ஒரு பேருந்து மட்டுமே நின்று, செல்வதாகத் தெரிகிறது. இருப்பினும், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிறுத்தத்துக்கு என்ன பேருந்து வந்து நிற்கிறது என்பதுகூட பயணிகளுக்குத் தெரியாத அளவுக்கு, மிகப்பெரிய பேனர் ஒன்று பேருந்து நிறுத்தத்தின் முன்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அங்கிருந்த பயணிகள், “இங்கு நிற்பதே ஒரேயொரு பேருந்து மட்டும்தான். ஆனால், இவ்வளவு பெரிய பேனரை இங்கு வைத்துவிட்டு, அந்தப் பேருந்தும் இங்கு நிற்காதபடி சூழலை ஏற்படுத்துகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பேருந்து நிறுத்த இருக்கையில் சென்று அமர்ந்தால், பேருந்து வருவதே தெரியவில்லை.

பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இத்தகைய பொது இடங்களில் இப்படி பேனர்களை வைக்கின்றனர். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இப்படி வைக்கப்படுவது இது முதன்முறையல்ல… அடிக்கடி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் இந்த இடத்தில் பேனரை வைத்து பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.