காவிரியில் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை

புதுடெல்லி/பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் அக்.30-ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

டெல்லியில் கடந்த 26ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாஜக, மஜத, ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்ற‌னர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின்சார்பில், ” உச்சநீதிமன்றம் மற்றும்காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் திறக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் நெற்பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகள் வெகுவாக‌ பாதிக்க‌ப்பட்டுள்ளனர். எனவே நிலுவையில் உள்ள 50 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்”என கோரப்பட்டது.

அதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ”கர்நாடகாவில் கடும் வறட்சிநிலவுகிற‌து. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மட்டும் 32 வட்டங்கள் வறட்சியில் பிடியில் உள்ளன. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவிலே நீர் இருப்பில் உள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினித்குப்தா, ” தமிழகத்தின் நெல் சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தார்.

கர்நாடகா எதிர்ப்பு: இதற்கு கர்நாடகாவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் எக்காரணம் கொண்டும் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், ‘‘இந்தபரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு, அடுத்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.