தமிழகம் முழுவதும் பால குருகுலங்களை தொடர்ந்து கண்காணிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த பால குருகுலத்தில் தங்கியுள்ள 26 சிறுமிகள் உள்பட 38 குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை. குருகுலத்தில் மாற்றுத் திறனாளித் குழந்தைகள் உள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. குருகுலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள குழந்தைகளை குடும்பத்துடன் இணைக்க வாய்ப்பு இருந்தால் அவர்களை குடும்பத்தினருடன் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட அந்த குருகுலத்தின் உரிமம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 38 குழந்தைகள் மீட்கப்பட்டு சேவாலயா இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது சிபிசிஐடி தரப்பில், குருகுலத்தின் நிர்வாகிக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குற்ற வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணித்து, குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மீட்கப்பட்ட 38 குழந்தைகளை ஒப்படைக்க கோரி குருகுலம் தாக்கல் செய்த வழக்கில், ஏற்கெனவே உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது என அரசுத் தரப்பில் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, அந்த மனுவை முடித்து வைத்தனர்.

மாவட்ட குழந்தைகள் நலக்குழு அமைப்பது தொடர்பான வழக்கில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எந்தெந்த மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் இல்லை என்பதை தெரிவிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.