லைகாவுக்கு பணத்தை திருப்பி தரத் தயார்: கோர்ட்டில் விஷால் தகவல்

விஷால் தனது படத் தயாரிப்பு செலவுகளுக்காக மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் 21 கோடி ரூபாய் கடனை வாங்கியுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது அந்த கடனை லைகா நிறுவனம் கொடுத்தது. அதற்கு பதிலாக விஷால் நடிக்கும் படங்களின் உரிமத்தை தங்களுக்கு தரவேண்டும் என்று லைகா நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. ஆனால் அதனை மீறி 'வீரமே வாகை சூடும்' படத்தை விஷால் வெளியிட்டதால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விஷால் 15 கோடி ரூபாய் கோர்ட்டுக்கு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவரது சொத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சொன்னது. சொத்து ஆவணங்களை தாக்கல் செய்த விஷால் 15 கோடியை இன்னும் செலுத்தவில்லை. இந்த நிலையில் இந்தவழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனையின்படி 80 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது என்றார்.

விஷால் வழக்கறிஞரிடம் பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள், செலுத்த வேண்டியது தானே என்று நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், “பணத்தை செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். லைகா தரப்புதான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை” என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.