தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, “நடிகர் விஜய்யைக் கண்டு தி.மு.க பயப்படுகிறது .

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களைக்கூறி கடைசி வரையிலும் அனுமதி தரப்படவில்லை. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரித்த ’ஜெயிலர்’ படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை, திரைத்துறைக்கு நல்லது கிடையாது. திரைத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். இது அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இருந்தது. தற்போது உள்ள ஆட்சியாளர்கள் அப்படி செயல்படவில்லை என்பது எங்களுடைய கருத்து. எந்த நிலையிலும் உடனுக்குடன் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்பவர்கள் தி.மு.க-வினர்.
திரைப்படங்களுக்கு சிறப்புக்காட்சி அனுமதி வழங்கிய பின்னர், குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். 2006 முதல் 2011 வரை ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திரைத்துறை இருந்தது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் திரைத்துறை முடங்கியே இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது.

தமிழ் சினிமாவில் இதுவரை சுமார் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆதிக்கம்தான். அதனுடைய உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று அமைச்சராக உள்ளார். அரசு, நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பாரபட்சம் காட்டப்படவில்லை. அனைவரும் சமமாகவே பார்க்கப்பட்டனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.