சல்மான்கானை சந்தித்த சிவராஜ் குமார்

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவராஜ்குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கர்நாடகாவையும் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சென்றடைந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் கன்னடத்தில் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்ரீனி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதையொட்டி தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சிவராஜ் குமார். அவரது படங்களிலேயே இந்த படம் முதன்முறையாக பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகிறது. இதனால் மும்பை வரை சென்று படத்தை புரமோட் செய்துள்ளார் சிவராஜ் குமார்.

அப்போது பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கானை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார் சிவராஜ்குமார். மேலும் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் சல்மான்கானின் டைகர்-3 திரைப்படத்திற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து சிவராஜ்குமார் கூறும்போது, “சல்மான்கான் ஒரு தங்கமான இதயம் கொண்ட மனிதர். இந்தியா சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் ரொம்பவே எளிமையாக இருக்கிறார். அவர் என்னை வரவேற்றபோது அவரது எளிமையை பார்த்து நான் ரொம்பவே வியந்து போனேன். என்னுடைய கோஸ்ட் படத்திற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.. நானும் அவரது டைகர்-3 திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறினேன். அவரை நேரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சிவராஜ் குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.