காங்கிரஸ் பல வழிகளில் ஒரு குடும்பத்தினரால் நடத்தப்படும் கட்சி; சசி தரூர் எம்.பி. பேச்சு

திருவனந்தபுரம்,

கேரளாவில் தனியார் அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் மக்களவையின் எம்.பி.யான சசி தரூர் கலந்து கொண்டார்.

இதன்பின் அவர் பேசும்போது, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அல்லது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரில் யாரேனும் ஒருவரை காங்கிரஸ் கட்சி பிரதமராக நியமனம் செய்ய கூடும் என உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், ஆச்சரியம் தரக்கூடிய முடிவு வரலாம். ஏனெனில், எதிர்க்கட்சியின் கூட்டணி ஒன்று உள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்புகள் உள்ளன. அதனால், நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தேர்தல் முடிவு வந்ததும், தனியொரு கட்சி என்றில்லாமல், அது ஒரு கூட்டணி என்பதனால், அக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், எனது கணிப்பின்படி காங்கிரஸ் கட்சியில், ஒன்று கார்கே பிரதமராகி, இந்தியாவின் முதல் தலித் பிரதமராகலாம். அல்லது காங்கிரஸ் பல வழிகளில் ஒரு குடும்பம் நடத்தும் கட்சி என்ற வகையில் ராகுல் காந்தி பிரதமராகலாம் என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.