தேசிய விருது பெற்ற மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்கள்

2021ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக மணிகண்டன் இயக்கிய ‛கடைசி விவசாயி' தேர்வானது. அதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

இதுதவிர சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி, சிறந்த நடிகராக அல்லு அர்ஜூன் (புஷ்பா), சிறந்த நடிகைகளாக ஆலியா பட்(கங்குபாய்), கிர்த்தி சனோன்(மிமி) உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டன. மேலும் ஆயிரம் கோடி வசூலித்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் 6 தேசிய விருதுகளை வென்றது.

சிறந்த இசையமைப்பாளர்களாக ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்த ஆஸ்கர் விருது வென்ற எம்எம் கீரவாணி, புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த பாடகியாக பார்த்திபன் இயக்கிய ‛இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்ற ‛மாயவா…' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. கருவறை என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

நம்மூர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்தி படமான ஷெர்ஷா-விற்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு பரபரப்பை கிளப்பிய தி காஷ்மீர் பைல்ஸ் படம் சிறந்த தேசிய படமாக தேர்வாகி இருந்தது.

விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு டில்லியில் இன்று(அக்., 17) தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். உடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், கிர்த்தி சனோன், எஸ்.எஸ்.ராஜமவுலி, ஸ்ரேயா கோஷல், பங்கஜ் திரிபாதி, ஸ்ரீகாந்த் தேவா, மணிகண்டன், தேவிஸ்ரீ பிரசாத், எம்எம் கீரவாணி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பலரும் தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றைய விழாவில் அவருக்கு அந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.