இ.எஸ்.ஐ., வழக்கு : நடிகை ஜெயப்பிரதா சரணடைய 15 நாள் கெடு

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. முன்னாள் எம்.பி.,யான இவர், சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணாசாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம், இ.எஸ்.ஐ., பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில் செலுத்தவில்லை.

இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த நீதிமன்றம், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும் இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.