கோவை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளையும், விஜயதசமி பண்டிகை நாளை மறுநாளும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பூ வகைகள்,பழங்கள் விற்பனை நேற்று தீவிரமாக நடைபெற்றது.
இதனால் பூ மார்க்கெட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கோவை பூ மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி கிலோ அடிப்படையில், செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160 முதல் ரூ.320 வரையும், கலர் செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், பட்டன் ரோஜா ரூ.280-க்கும், செண்டு மல்லி ரூ.100-க்கும்,
கோழிக் கொண்டை ரூ.100-க்கும், மல்லிகைப் பூ ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும், முல்லை ரூ.600-க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.40-க்கும், தாமரை ஒன்று ரூ.50-க்கும் விற்கப்பட்டது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையின் போது செவ்வந்தி அதிகளவில் விற்கும். நேற்று 12 டன் செவ்வந்தி விற்பனைக்காக வந்தது’’ என்றனர்.
பழ வியாபாரிகள் கூறும்போது, ‘‘கிலோ அடிப்படையில் ஆப்பிள் ரூ.180-க்கும், ஆரஞ்சு ரூ.160-க்கும்,மாதுளம் பழம் ரூ.240 முதல் ரூ.260-க்கும், திராட்சை ரூ.100முதல் ரூ.200-க்கும், கொய்யா ரூ.200-க்கும், எலுமிச்சை ரூ.120-க்கும், ஒரு தேங்காய் ரூ.30முதல் ரூ.50-க்கும், ஒரு ஜோடி வாழைக் கன்று ரூ.30-க்கும்,
வெள்ளைப் பூசணி ஒரு கிலோ ரூ.35, பொரி பக்கா ரூ.30-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ.200-க்கும், மாவிலை ஒரு கட்டு ரூ.20-க்கும், வாழைப்பழம் டஜன் ரூ.80-க்கும் விற்பனைசெய்யப்பட்டது. அதே போல், வீட்டில் ஒட்டப்படும் வண்ணக் காகிதங்கள் ரூ.30-க்கு விற்கப்பட்டன’’ என்றனர்.