திரிணமூல் எம்.பி. மொய்த்ராவின் நாடாளுமன்ற கணக்கை துபாயிலும் பயன்படுத்தியுள்ளனர்: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாகப் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே புகார் தெரிவித்தார்.

இதை ஜெய் ஆனந்த் தேஹத்ராய் என்ற வழக்கறிஞர் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், அதற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் வழங்கியதாகவும் துபே கூறியுள்ளார். இந்தப் புகாரை மக்களவை நெறிமுறைகள் குழு விசாரித்து வருகிறது. வரும் 26-ம் தேதி துபே, ஜெய் ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளி்க்க மக்களவை நெறிமுறைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக மஹுவா மீது சிபிஐயிடம் ஜெய் ஆனந்த் புகார் அளித்துள்ளாா்.

இந்நிலையில் நிஷிகாந்த் துபே நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பணத்துக்காக நமது நாட்டின் பாதுகாப்பை திரிணமூல் எம்.பி.மஹுவா மொய்த்ரா அடகு வைத்துவிட்டார். அவரது நாடாளுமன்றக் கணக்கை துபாயிலும் பயன்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய தகவல் மையம் (என்ஐசி) தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும். ஒவ்வொரு எம்.பி.க்கும் நாடாளுமன்றத்துக்கென சிறப்பு ஐ.டி.தரப்படும். மஹுவா மொய்த்ராவுக்குக் கொடுத்த அந்தக் கணக்கைதான் துபாயில் பயன்படுத்திஉள்ளனர். இதுபோன்ற கணக்குகளைதான் நாட்டின் பிரதமர், நிதித்துறை, மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்துகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மஹுவா மீதான விசாரணையை உடனடியாகத் தொடங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.