7-ம் நாள் நவராத்திரி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பர் பவனி

திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் உற்சவரான மலையப்பர் பவனி வந்தார்.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் பவனி வந்ததை தொடர்ந்து, தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்பர் வீதி உலா வந்து அருள் பாலித்து வருகிறார்.

தசரா விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து ஏராளனமான பக்தர்கள் நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஜீயர் குழுவினர், நடனக் குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு சந்திரபிரபை வாகனத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.