ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழுவை இன்று சந்திக்கிறது சட்ட ஆணையம்

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று சந்தித்து, தங்கள் பரிந்துரையை வழங்குவார்கள் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அமைக்கப்பட்ட இக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் முதல் கூட்டம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள், மாநில அரசுகளில் இடம்பெற்றுள்ள கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகள் ஆகியவை தங்கள் ஆலோசனைகளை வழங்க அவற்றின் பிரதிநிதிகளை அழைப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமை யிலான குழுவை சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று (அக். 25) சந்தித்து தங்கள் பரிந்துரையை வழங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான சட்ட ஆணையம், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த தனது அறிக்கையை இம்மாத தொடக்கத்தில் இறுதி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் குழுவுடனான சந்திப்பில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை சட்ட ஆணையம் ஆதரிக்கும் என்றும் இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு காலக்கெடுவை பரிந்துரைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.